இரவு மலர்


























தீராத தேநீரின்
சிநேகத்தோடு
தொடர்ந்து கொண்டிருந்தது

தெற்கு வீதிக்குள் நுழைந்தோம்

இளைப்பாறிக் கொண்டிருந்த‌
சாலையோர உணவு விடுதியயொன்றில்
களைந்து கிடந்த‌
காலி இருக்கையைப் பார்த்ததும்
தேவதச்சன் என்ற‌ ஆறுமுகத்தின் அங்காடி
இந்தத் தெருவில் இருப்பதாகச் சொன்னாய்

கவிதையைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்

செண்பவள்ளியம்மன் கோவிலைக் கடக்கும் போது
மொழியின் வறட்சியால்
முற்றுப் பெறாத
எனதொரு கவிதையை
விமர்சித்தாய்

அம்மா மெஸ்சின் திருப்பத்தில்
ஒரு இரவுப்பறவை இடம் பெயர்ந்தபோது
ந‌.பி-யை வாசித்திருக்கிறாயா என்றாய்

என‌க்குச் சிற‌கு முளைத்துக் கொண்டிருப்ப‌தாக‌ சொன்னேன்

ர‌ஜ்னிஷை வாசிக்க‌ச் சொன்னாய்

வ‌க்கீல் தெருவைக் க‌ட‌ந்த‌போது
விடை பெற‌லாம் என்று
நீ மூன்றாவ‌து முறையாக‌ச் சொன்னாய்

நான், த‌ரையில் இற‌ங்கும் விமான‌ங்க‌ளை சிலாகித்தேன்

ர‌ப்ப‌ரும், புளிய‌ ம‌ர‌த்தின் க‌தையும் நாளை த‌ருவ‌தாக‌ச் சொன்னாய்

நாம் பிரிய வேண்டிய‌
ஜோதி ந‌க‌ர் ச‌ந்திப்பு வ‌ந்த‌தும்
விடை பெற‌லாம் என்று
நான் நான்காவ‌து முறையாக‌ச் சொன்னேன்

நீண்ட‌ தியான‌ம் க‌லைத்த‌துபோல‌
கால‌த்தில் இடைவெளி இருப்ப‌தாக‌ச் சொன்னாய்

பிற‌கு கால‌த்தைப் ப‌ற்றியே வெகுநேர‌ம் பேசிக்கொண்டிருந்தோம்

ம‌ல‌ர்ந்திருந்த‌ இர‌வு ம‌ல‌ரை
வெண் நிற‌ வ‌ண்டொன்று
சுற்றிக் கொண்டிருந்த‌து

(2009இல் எழுதியது)