வடக்கே கன மழை பெய்கிறது



மழை பெய்வதாகக் கூறி
சிதறி ஓடுகிறார்கள்
வீடு திரும்பும் பள்ளிக் குழந்தைகள்

தூறல் ஆரம்பித்துவிட்டதாக
நான்
தப்பி வெளியேறிக் கொண்டிருக்கிறேன்

விருப்பப் பாடலை
ஒலிபரப்பும்
பண்பலைத் தொகுப்பாளினி
வடக்கே கன மழை பெய்வதாகச்
சொல்லிக்கொண்டிருக்கிறாள்

ஆயிரம் துளிகள்
விழுகின்றன
பல்லாயிரம் துளிகள்
விழுகின்றன
என் வீட்டிற்குச் செல்லும்
சாலையை அடைவதற்குள்
லட்சம் துளிகள்
விழுந்து தெறிக்கின்றன

‘அடர்த்தியான மழை’ என்ற
பத்திரிகைச் சொல்
நினைவுக்கு வருகிறது

ஒரே ஒரு துளியை மட்டும்
உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு
பாதுகாப்பாக என் வீட்டிற்குள்
அடைந்து கொள்கிறேன்.

இனி என் தனிமை தீர
பேசிக்கொண்டிருப்பேன்
அந்த ஒரு துளியோடு.
(2009-ல் எழுதிய கவிதை)