விஜயா வேலாயுதம் நேர்காணல் வாசகன் விதை நெல்லைப் போன்றவன்


கோவையின் அடையாளுங்கள் ஒன்று விஜயா பதிப்பகம். அதன் பதிப்பாளர் விஜயா வேலாயுதம், இந்தத் துறையில் ஐம்பது ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். 1978-ம் முதன் முதலாக வாசகர்களுக்கான திருவிழாவை நடத்தியவர். புத்தக விற்பனையாளராக, பதிப்பாளராக மட்டுமல்லாமல் முதன்மையான வாசகராகவும் இருப்பவர். தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பாபசி) விருது பெற்றவர். கோவையில் அவரது புத்தகக் கடையில் வைத்து மேற்கொண்ட நேர்காணலின் சுருக்கம் இது.

முதலில் பதிப்பித்த புத்தகம் எது?

‘புதிய பார்வை’ என்னும் பெயரில் நா.பார்த்தசாரதியின் கட்டுரைகளை வெளியிட்டோம். பிறகு அவரது கவிதைகளை, ‘மணிவண்னன் கவிதைகள்’ என்ற பெயரிலும் சிறுகதைகளை ‘தேவதைகளும் சில சொற்களும்’ என்னும் பெயரிலும் வெளியிட்டோம். பிறகு மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள், ‘ஊர்வலம்’ ஆகிய தொகுப்புகளையும் வெளியிட்டோம்.


முன்னனுபவம் இல்லாமல் எப்படி இந்தத் துறைக்கு வந்தீர்கள்?

முன்னனுபவம் இல்லை; ஆனால் வாசிப்புனுபவம் இருந்தது. முன்பு ரயில்வே ஸ்டேஷன்களில் பழநியப்பா பிரதர்ஸ் புத்தங்களைக் காட்சிக்கு வைத்திருப்பார்கள். மதுரையில் சாமிநாதன், பாரதி புத்தகாலயம் என்ற பெயரில் வைத்திருப்பார். இவையெல்லாம் ஒரு தீப் பொறியாக எனக்குள்ளே விழுந்தது. மற்றபடி ஒரு வாசகனாக நான் எப்படியெல்லாம் புத்தகங்களைத் தேடி அலைந்தேனோ அதை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். வாசிப்பு என்றால் ரொம்பவும் உணர்ச்சிவசமாக ஆகிவிடுவேன். ஜெயமோகன், ராஜமார்த்தாண்டன் பற்றி, ‘உயர் அழுத்த மின்சாரம் ஓடும் மெல்லிய கம்பி போன்றவர்’ எனச் சொல்வார். அது எனக்கும் பொருந்தும். இந்த வாசிப்புதான் எனக்கு உயர் அழுத்த மின்சாரம்.


துப்பறியும் நாவலில் தொடங்கி சமூக நாவல் பக்கம் வந்ததாகக் கூறியுள்ளீர்கள். அந்தக் காலகட்டத்தில் பிரபலமாகயிருந்த சரித்திர நாவல் உங்களைக் கவரவில்லையா?

சிறு வயதிலேயே வறுமையைப் பார்த்துதான் வளர்ந்தேன். அதனால் சரித்திர நாவல்களின் பிரம்மாண்டம் என்னை ஈர்க்கவில்லை. சமீபத்தில் ஜெயமோகனின் ‘அறம்’ தொகுப்பில் ‘சோற்றுக் கணக்கு’ என்னும் ஒரு கதை. திருவனந்தபுரத்தில் சாப்பாட்டுக் கடை வைத்திருந்த கெத்தேல் சாகிப் என்பவரைப் பற்றிய கதை. இதைப் படித்தால் சாப்பாடின் முக்கியத்துவம் தெரிகிறது. இந்த மாதிரி கதைகள்தான் எனக்குப் பிடித்திருக்கின்றன.

சுய முன்னேற்ற நூல்களும், உடல் நலன் சம்பந்தப்பட்ட நூல்களும்தான் அதிகமாக விற்பனையாகின்றனவா?

இல்லை. நீங்கள் வாசகர்களிடம் இனம் காட்ட வேண்டும். இங்கு ஒரு அம்மா வந்தார். பழ. கருப்பையாவின் ‘மகாபாரம் மாபெரும் விவாதம்’ என்னும் புத்தகத்தை எடுத்து அவரிடம் காட்டினேன். அதை முழுக்கப் படித்திருக்கிறேன். அந்தப் புத்தகம் என்னைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. அதிலிருந்து, ‘காக்கப்பட வேண்டிய இல்லத்திற்கு வழி விசாரித்துச் சென்று கதவைத் தட்டுவது அறம்’ என்ற ஒரு வரியை எடுத்துக் காண்பித்தேன். சாதரணமான வரிதான். உடனே ‘பில் போட்ருங்க’ என்று சொல்லிவிட்டார்.

புத்தகத்தை அத்தியாவசியப் பொருளாகப் பாவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைக்குப் புத்தகங்களின் விலை அதிகமாகியுள்ளதே?

வாங்க வேண்டும் என நினைக்கும் வாசகன் எவ்வளவு விலை இருந்தாலும் வாங்குவான். ரோட்டில் போகும் ஒருவரை மறித்து இந்தப் புத்தகத்தை இலவசமாகத் தருகிறேன் வைத்துக்கொள் என்றால் வாங்குவாரா? படித்துப் பார்த்தால் 50 ரூபாய் தருகிறேன் எனச் சொல்லிப் பாருங்கள் வாங்க மட்டார். அதனால் விலை அதிகம் என்பதில் எனக்கு உடன் பாடில்லை. பதிப்பாளர்கள், விற்பனையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். லாபம் ஒன்றை மட்டும் நோக்கமாகக் கொண்டு பதிப்பாளர்கள் செயல்படக் கூடாது. எத்தனை ஹோட்டல்கள், எத்தனை ஸ்வீட்ஸ் ஸ்டால் இருக்கின்றன, ஆனால் புத்தகக் கடைகள்?

எழுத்தாளர்களைத் தொடர்ந்து கெளரவுத்து வருகிறீர்கள்…

சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளார்களுக்குத் தொடர்ந்து பாராட்டுக் கூட்டம் நடத்தி வருகிறோம். தி.க.சிவசங்கரன் சாகித்திய அகாடமி வாங்கியபோது மட்டும் விழா நடத்தவில்லை. ஏனென்றால் ‘விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்’ நூலை நாங்கள்தான் வெளியிட்டோம். பொதுவாக எங்கள் நூல்களுக்கு நாங்களே பாராட்டுக் கூட்டம் நடத்துவதில்லை.

இதில் ஒரு சுவையான சம்பவம். நாங்கள் வெளியிட்டிருந்த வண்ணதாசனின் ‘சமவெளி’ சிறுகதைத் தொகுப்பைப் பாரதியார் பல்கலைக்கழகம் பாடமாகத் தேர்வுசெய்தது. அது குறித்து எனக்கு எழுதியிருந்தார்கள். அப்போது நிலைக்கோட்டையில் வண்ணதாசன் ஸ்டேட் வங்கியில் பணியில் இருந்தார். கொஞ்சம் ஸ்வீட் வாங்கிப் போய் அவருடன் பணியாற்றும் எல்லோருக்கும் கொடுத்தேன். அவர்களுக்கு இவர் எழுத்தாளர் என்பதே அப்போதுதான் தெரியும். பின்னால் இங்கு நடந்த ஒரு விருது விழாவில் இதையெல்லாம் விடப் பெரிய விருதை வேலாயுதம் கொடுத்துவிட்டார் என்றார் வண்ணதாசன்.

வாசகர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

ஒரு தீவிரமான வாசகன் வந்தால், எனக்கு விதை நெல் கிடைத்துவிட்டதைப் போன்ற மகிழ்ச்சி. நான் எப்படித் துப்பறியும் நாவல் வாசிக்கத் தொடங்கி இந்த இடத்திற்கு வந்தேனோ அதுமாதிரி எங்களால் வாசகர்கள் மாறியிருக்கிறார்கள்; வளர்ந்திருக்கிறார்கள். வாசகர்களை ஒட்டி நானும் வளர்ந்திருக்கிறேன். விற்பனை மட்டுமல்ல; மக்களின் பண்பும் வளர்ந்திருக்கிறது. ஒருத்தர் வாரார். ஆறு புத்தகங்கள் வாங்குகிறார். ஒன்றுக்குப் பில் போட எங்கள் பிள்ளைகள் மறந்துவிடுகிறார்கள். தேடி வந்து கொடுத்துவிட்டுப் போகிறார்.


மக்களின் ரசனையை மாற்ற முடியுமா?

உள்ள வந்துவிட்டால் போதும். ‘நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?’ ‘கார் ஓட்டுவது எப்படி?’ ‘சமையல்’ எது வேண்டுமானாலும் இருக்கட்டும். வாங்கத் தலைப்பட்டுவிட்டால் போதும். தானாகவே மாறிவிடும். ஜிலேபியவே ஒருத்தன் தின்றுகொண்டிருக்க முடியாது. அவனுக்குத் தெகட்டும். அப்போது அவன் தீவிர இலக்கியத்துக்கு வந்துதான் ஆக வேண்டும்.

மு.வ., ஜெயகாந்தன், கண்ணதாசன், நா.பா என உங்கள் ஆதர்ச எழுத்தாளார்களில் ஏன் நா.பா.வை மட்டும் ஏன் பதிப்பித்தீர்கள்?

ஜெயகாந்தன் புத்தகங்களை மீனாட்சிப் புத்தக நிலையம் வெளியிட்டு வந்தார்கள். மு.வ.வின் புத்தகங்களை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுவந்தது. இதற்கு இடையில் போய் நான் நின்றால் சரி இல்லை. கண்ணதாசன் இங்கு வந்திருந்தபோது, ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்து ‘பப்பளிஷ் பண்ணிக்கோ’ என்று சொன்னார். நான் மறுக்காமல் வாங்கிவைத்துவிட்டு போகும்போது அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஏனென்றால் வானதி திருநாவுக்கரசுதான் கண்ணதாசனின் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். அதை வாங்குவது நல்ல பண்பல்ல. நா.பா., தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பிக்காத புத்தகங்களை என்னிடம் தந்து பதிப்பிக்கச் சொன்னார். அதனால்தான் அவற்றைப் பதிப்பித்தேன்.

சமீபத்தில் பதிப்பித்த புத்தகம் எது?

சமீபத்தில் நாஞ்சில் நாடனின் நேர்காணல் தொகுதியைப் பதிப்பித்திருக்கிறோம். விருப்பு, வெறுப்பு இல்லாமல் தன் கருத்துகளை வெளிப்படையாக, துணிச்சலாகச் சொல்லக்கூடியவர். அடுத்தாக ஜெயமோகனின் ‘நூறு நாற்காலிகள். இந்த நூல் மலையாளத்தில் ‘நூறு சிம்மாசனம்’ என்னும் பெயரில் வெளிவந்து லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றன. இப்போது எழுதுபவர்களில் ஜெயமோகன் அளவுக்கு திறமையான எழுத்தாளர் இல்லை எனச் சொல்லலாம். அவரின் பணிவும் திறமையும் என்னை வியக்க வைக்கிறது.

சந்திப்பு: ஜெய்குமார் மண்குதிரை