மிதிலா மிதிலா


மிதிலா மிதிலா

வெண் மணல் பரப்பில்
மிதிலா மிதிலா
ஏர் முனையின் கீழல்ல
நீ தவழ்வது
பாதிராமணல்* விரிப்பில்

நித்யம்
அநித்யமாகி
சமுத்திரங்கள் வற்றி
வெண்குதிரைகள் கரையேறிவிட்டன

மிதிலா
நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

கரையோரங்களில்
உன் கண்களைப் பறிப்பது
மான் அல்ல
மாயமும் அல்ல
அவை
செம்மீன் தேடி வரும் நீர் நாய்கள்

மிதிலா
காகமாக அல்ல
அவன்
நீ வியந்து பார்க்கும்
பாம்புத்தாரா* *வாக  உருமாறிப்
பறந்துகொண்டிருக்கிறான்

பூமி புரண்டு
புலன்கள் திசை மாறி
இருபத்தியொன்றாம் நூற்றாண்டு
எல்லோரையும் வெளியேற்றிவிட்டது
அவர்களும் இவர்களும்
இவனும் அவனும்கூட
இந்தத் தீவிலிருந்து
கரையேறிச் சென்றுவிட்டார்கள்

நீதம்
அநீதமாகி
அநீதமே
நீதமான பிறகு
பாவக் கனி விழுங்கிய பறவையாக
பாதிராமணல் மீது
ஏன் பறந்துகொண்டிருக்கிறாய்?

மிதிலா மிதிலா


* ஆலப்புழா மாவட்டத்தில் வேம்பநாடு ஏரியின் நடுவில் உள்ள சிறிய தீவு பாதிராமணல். முஹம்மா பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்தச் சிற்றூரில் வாழ்ந்த குடும்பங்கள் 1970களுக்குப் பிறகு வெளியேறிவிட்டன. இப்போது பாதிராமணல் ஆளரவமற்ற தீவு.

* * பாம்புத்தாரா, பாம்புபோல் நீண்டு வளைந்த தலையுள்ள பறவை. வேம்பநாடு ஏரியில் பரவலாகக் காணப்படும்பறவையினங்களுள் ஒன்று. 

(காலச்சுவடு ஏப்ரல் இதழ் 2016)